Monday, September 04, 2006

சுதந்திரம்

நாற்பத்தெட்டில்
மாசி நான்காம் நாளில்
நமக்குச் சுதந்திரமாம்

படித்து
பரீட்சை எழுதி
புள்ளிகளும் பெற்றோம்

ஐம்பத்தெட்டில் தமிழன்
அடிபட்டானாம்
கண்களில் அனல் கக்க
அப்பா கதையாகச் சொன்னார்

குருவி போல்ச் சேர்த்த பணத்தில்
குதூகலமாய் தொட்டில் வாங்கி
மகப் பேற்றுக்காய்
வடக்கே சென்ற அம்மாவின்
வரவுக்காய் காத்திருக்கையில்...

அக்கினியில் அத்தொட்டில்
கருகுவதைப் பார்த்தாராம்
மலவாளி தலையில் கவிட்டு
மாமா நடப்பதைப் பார்த்தாராம்
ரயரோடு ஒரு தமிழன்
எரிவதைப் பார்த்தாராம்
இன்னும் அவலங்கள்.....!
எத்தனையோ பார்த்தாராம்

இவையெல்லாம் கதையாக
கொடுங் கதையாக
எனக்குள்ளே பதிந்தாலும்
போன கதைதானே....!
புழுங்காமல் இருந்தேன்

சுதந்திரம் அது என்ன?
புரியாமல் வாழ்ந்தேன்

எண்பத்தி மூன்று ஆடியின்
வெலிக்கடை ஓலத்தில்
சுதந்திரம்!
அது வேண்டும்
எமக்கென
நிரந்தர இடம் வேண்டும்
புரிந்தாலும்.....!
சுயநலம் அது கொண்டு
வெளிநாடு ஓடி வந்தேன்
அந்நியன் மண்ணிலே
அகதி முகாமிலே
வயிற்றுக்காய்......
கன்ரீனில் வரிசையிலும்
காசுக்காய்.....
சோசலிலே கதிரைகளிலும்
மானத்தை விற்று
வேலைக்காய்.....
கால் கடுக்க வீதிகளிலும்
வெள்ளையனின் வாசல்களிலும்
வெட்கத்தை விசிறி
என்னத்தைக் கண்டோம்!
சுதந்திரம் அது என்ன?
மறந்து போச்சு எமக்கு

வேலை கிடைத்தும்
வீடு கிடைத்தும்
விசா கிடைத்தும்
ஈடு கொடுக்க முடியவில்லை
அந்நிய தேச வாழ்க்கைக்கு

ஊரின் அவலங்கள்
உலுக்கும் சேதியாய்
நெஞ்சைக் குடைகையிலும்
வேறு வழியின்றி
ஓடிச் செல்கின்றோம்
அந்நியனின் கீழ்
அடிமையாய் வேலை செய்ய

சுமைகளாய் சோகங்கள்
தொடர்களாய் வேலைகள்
சுதந்திரம் அது வாங்க
ஏணி எங்கே?
தேடுகின்றோம்.

சந்திரவதனா
ஜேர்மனி
4.2.1998

No comments: