Tuesday, October 24, 2006

தொலைக்காதே உன்னை



யாரும் எதையும்
மறந்து போவதில்லை
மறதிக் குவியலுக்குள்
புதைந்து கிடப்பதை
கிளறிப் பார்க்கத்தான்
விரும்புவதில்லை

சிலர்தான்
கிளறிக் கிளறி
கிளர்ந்தெழுகிறார்கள்

சிலரோ
உருகி உருகி
அழுது வடிக்கிறார்கள்

இன்னும் சிலரோ
பொருமிப் பொருமி
போரிடத் துணிகிறார்கள்

பெண்ணே..! நீ
கிளர்ந்தெழு
அழுவதை மறந்திடு
போரிடவும் துணிந்திடு

யாரும் ஏதும் சொல்வார்களேயென்று
நாணிக் கோணி வீணே நிற்காதே

திணிப்பதற்கென்றே திரிவார்கள்
குறை பிடிப்பதில்
கண்ணாய் இருப்பார்கள்
கணப் பொழுதில் உன் மனதை
கலைத்தும் விடுவார்கள்

தொலைக்காதே உன்னை
தொலைத்து விடு உன்
மனதைக் கலைப்பவரை

தொலைத்து விடு
பெண்ணென்று விழிப்பவர்களை
பூவென்று நுகர்பவர்களை
கண்ணென்று கதை பேசுபவர்களை
இன்னும் சொல்லி ஏய்ப்பவர்களை...

மார்ச் - 2000

Saturday, October 14, 2006

நினைவிலே ஒரு தீபாவளி

செம்பருத்தி சிவந்திருக்க
ரோஜாக்கள் அழகு தர
வண்டுகள் ரீங்கரிக்க
மல்லிகை மணங்கமழ
தென்னோலை சரசரக்க
அணிலொன்று தொப்பென்று
முற்றத்தில் வீழ்ந்து
மாதுளையில் தாவி
மயாமாய் மறைந்தது

கொடிப்பூ போட்ட
கோடிச் சட்டையுடன்
தங்கை
கொலு போல இருந்தாள்
அசைந்தாலே
சட்டை நலுங்கிப் போகுமென்று
அசையாது இருந்தாள்
வெடி வேண்டுமென்று
தம்பி அடம் பிடித்தான்

பகட்டாகப் பட்டுடுத்திய
பக்கத்து வீட்டு மாமி
வீதியிலே பவனி வந்தாள்
மகன் வெளி நாட்டிலாம்

நரகாசுரனை வதம் செய்த கதை பற்றி
பாட்டி குட்டிப் பிரசங்கமே செய்தாள்
வெளியிலே போன அப்பா
பங்கிறைச்சியுடன் வந்தார்
அள்ளி முடித்த ஈரத்தலையுடன்
அம்மா அடுக்களையில் மாய்ந்தாள்

பால் குடித்த ஆட்டுக்குட்டி
பரவசமாய் துள்ளி வந்து
குரோட்டனில் ஒரு கடி கடித்து
மீண்டும் தாய்முலை வாய் பதித்து...

சின்னச் சின்னதாய்
நெஞ்சை நிறைத்த சந்தோசம்
அன்றைய தீபாவளியில்

இன்றைய தீபாவளியில்
அருகில் மாதுளையும் இல்லை
மரம் தாவும் அணிலும் இல்லை
குட்டிப் பிரசங்கம் செய்ய
பாட்டியும் இல்லை
பட்டாசும் இல்லை

எம்மவர் வதைபடும்
அவலக்கதை மட்டும்
சேதியாய் தினம் வரும்
அது கேட்டு மனம் கொதித்து
உடல் தகித்து
கண்ணீரைச் சொரிகையிலும்
கள்ளமாய் சில நினைவுகள்
உள்ளத்துள் ஒளிந்திருக்கும்
அன்றைய தீபாவளியும்
அதனோடு வெல்லமாய் இனித்திருக்கும்

சந்திரவதனா
7.10.1999

Tuesday, October 10, 2006

வழக்கம் போல் அடுப்படிக்குள்..!

எப்போதும் போலவே
இன்றைய எனது காலையும்
அவசரமாய்த்தான் விடிந்தது.

இப்போதெல்லாம்
இனிய கனவுகள் என்பது
எல்லோருக்கும் போல்
எனக்கும்
இரவுகளில் வருவதில்லை

வானிலே பறக்கும் விமானங்கள்
நேரிலே மோதுவதாய்
ஏதேதோ கனவுகள்
தீப் பிழம்புக் குவியலுக்குள்
நான் நின்று தவிப்பதாய்
திடுக்கிட்ட விழிப்புகள்

ஆனாலும்
விடியல்கள் வழமை போலத்தான்...

இன்று என்ன சமையல்
என்பதில் தொடங்கி
கூட்டல் கழுவல்
துடைத்தல் பெருக்கல்
எல்லாம் முடித்து....
வேலைக்கு ஓட வேண்டுமென்பதில்
மனசு பரபரத்தது.

இத்தனைக்கும் நடுவே...
"அகப்பையும் கையுமாய்
அடுப்படியை வலம் வருவதும்
படுக்கை விரிப்பதுவும் தான்
பெண்ணுக்கு வரைவிலக்கணம்
என்ற நினைப்பை
கொழுத்தி எறிந்தவள் மாலதி...
"
பெண் பெருமை பாடியது வானொலி.

எனக்குள்
மின்னலாய் கோடிட்டது மகிழ்ச்சி
நானே
களத்தில் நிற்பது போன்ற திருப்தியுடன்
மாலதியின் நினைப்பை மனதில் இருத்தி
பத்திரிகையில் வந்த கவிதை படித்து
ஒரு மிடுக்கோடு நிமிர...

"என்னப்பா இண்டைக்குச் சாப்பாடு...?
பேப்பரும் கையுமா
நீ இருந்தால்...!
எனக்குப் பசிக்குது..."
கடுப்போடு என் கணவன்
சிடுசிடுக்க
மிடுக்கும் போய்
மாலதியின் நினைப்பும் போய்

அகப்பையும் கையுமாய்
அடுப்படிக்குள் நான்
வழக்கம் போல....

சந்திரவதனா
யேர்மனி.
10.10.2001

Monday, October 09, 2006

நிராகரிப்பு

1)
என் கண்களில்
அருவி பாய்ந்தது
நீ உன் காதலை
அவளிடம் தெளித்த போது.




2)
இரவு
பகலை விழுங்கியது
காதலை நிராகரித்த
உன் கடிதம்
என் சந்தோசத்தை
விழுங்கியது போல்.


3)
நெஞ்சில்
சுரீரென்று வலித்தது
உன் காதல் அம்பு
என் நண்பியைத்
துளைத்த போது.


சந்திரவதனா
5.9.1999

Thursday, October 05, 2006

கல்யாண சந்தை



இது ஒரு
வினோதமான சந்தை

எல்லாப் பொருட்களையும்
பணத்துக்காக விற்பார்கள்
இங்கு மட்டும்
பெண் என்ற
உயிர்ப் பொருள் ஒன்று
பணம் கொடுத்து
விற்கப் படும்.

சந்திரவதனா
ஜேர்மனி
2003

Wednesday, October 04, 2006

மனநோயாளி



நீதான்
உலகமென்ற நினைப்பில்
இத்தனை வருடங்கள்!
எனது
அசைவுகள் எல்லாமே
உன்னோடு மனம் கோர்த்து
உன்னையே மையப் படுத்தி..!

உனது கை கோர்ப்பு
நட்புடனா!
அல்லது நடிப்புடனா!
எனக்குத் தெரியவில்லை.

திடீரென நீயென்
கைகளை உதறி விட்டு
விசுக் விசுக்கென
உன் கை வீசி
நடக்கத் தொடங்கியதும்...
மனவெளிகளின்
தனிமை தாங்காது
புடைத்த மூளைநரம்புகளின்
வலியோடு... நான்

அவை
வெடித்துச் சிதறி...
"மனநோயாளி" என்ற முத்திரை
என் மேல் குத்தப் படுமுன்
ஒரு வார்த்தை சொல்லிவிடு
நட்புடனா..?
நடிப்புடனா..?

சந்திரவதனா
ஜேர்மனி
24.3.2002

http://www.selvakumaran.de/index2/kavithai/mananoyali.html

Monday, October 02, 2006

நினைவுகள்

முற்றத்து நிலாவும்
முழு நீள விறாந்தையும்
"மூத்தக்கா" என்றழைக்கும்
என் அன்புத் தம்பியும்
மெத்தென என் மனதில்
மிருது நடை போடுகையில்
போரிலே என் தம்பி
பொருதி விட்ட நினைவு வந்து
கோரமாய் எனைத் தாக்கும்

தென்னை இளநீரும்
தேன் சுவை மாம்பழமும்
சின்ன வார்த்தைகளால் எனைச்
சீண்டி விடும் அண்ணாவும்
சில்லென என் நினைவை
சிலிர்க்க வைக்கும் அக்கணத்தில்
ஷெல்லிலே அவன் கால்கள்
சில்லான நினைவு வந்து
கொல்லாமல் எனைக் கொல்லும்

நீலக் கடலலையும்
நெடிதுயர்ந்த பனை மரமும்
பாசமுடன் எனை அணைக்கும்
நேசமிகு அம்மாவும்
ஈரமழை பொழிந்து என்
நெஞ்சை நனைக்கையிலே
வன்னி மண்ணில் அவள்
அகதியான நினைவு வந்து
கொடும் புயலாக எனை அலைக்கும்

சந்திரவதனா
ஜேர்மனி


ஒலிபரப்பு - ஐபிசி வானொலி நவம்பர்-1997
பிரசுரம் - ஈழநாடு-7-13 நவம்பர் 1997

Thursday, September 28, 2006

அழகு..?

மனதை அசைத்து விட்டு
மௌனமாய் நின்றான்.

அழகு அவன்
விழிகளிலா..!
மொழி மறந்த இதழ்களிலா..!
அல்லது மௌனத்திலா..!

சிரிக்கக் கூடாதென உதட்டை
விரிக்காதிருந்தாலும்
விழிகளில் அது வழிந்தது.

பார்க்கக் கூடாதென விழிகளைச்
சுருக்கியிருந்தாலும்
கருமணிகள் கட்டுடைத்து
என் விழிகளோடு மோதின.

இவனோடு பேசாது போனால்
எனக்குப் பேசத் தெரிந்ததில்
என்ன பிரயோசனம்..!

"பெயர் என்ன? "

விழி விரித்து
இதழ் உடைத்து
மௌனம் கலைத்தான்.

பெயர் கூட அழகுதான்.
படமெடுக்க அனுமதிப்பானா?

அனுமதியின்றி...
அவசரமாய்...
குறை நினைப்பானா?

இப்போ...
மனத்திரையில் அவன் வந்து
மனதை அசைத்து விட்டு
மௌனமாய் நிற்கிறான்.

அழகு அவன்
விழிகளிலா..!
மொழிய மறந்த இதழ்களிலா..!
அல்லது மௌனத்திலா..!

சந்திரவதனா
October-2002

Saturday, September 23, 2006

பெண்ணே நீ இன்னும் பேதைதானே!


மஞ்சளில் தாலி கட்டி
வேலி என்பார்

மலரினைத் தலையில் வைத்து
மலரே என்பார்

சொல்லினை அம்பாய் எய்து
துடிக்காதே என்பார்

வேரினில் குத்தி விட்டு
வாடாதே என்பார்

கையினில் தீயைத் தந்து
தீயாதே என்பார்

கண்ணிலே கையை விட்டு
கலங்காதே என்பார்

புண்ணினைக் கிளறி விட்டு
புளுங்காதே என்பார்

மண்ணினைத் தாங்குவாள் போல்
பொறுமை கார் என்பார்

நுண்ணிய உணர்வுகள்
உனக்கேன் என்பார்

பெண்ணெனப் பிறந்ததற்காய்
இன்னும் . என்ன சொல்வார்

பேதைதானே நீ
பேசாதே என்பாரா?!

சந்திரவதனா
யேர்மனி
17.8.2000

Wednesday, September 20, 2006

நட்பென்றுதானே நம்பினேன்..!

போரிலும்
புலம் பெயர் வாழ்விலும்
வாழ்வின் வசந்தங்கள்
வாடி விட்ட
தனிமை பூத்த
ஒரு பொழுதில் தானே
உன் தொலைபேசி அழைப்பு
எனைத் தேடி வந்தது.

நட்பென்றுதானே நம்பினேன்
கை கோர்க்க எண்ணி
விரல் நீட்டினேன்

என் விரலை
சிறை வைத்து
பின் முறித்தெறிவதற்கான
முன்னேற்பாடுதான் அது என்று
முற் கூட்டியே நீ
சொல்ல மறந்ததேன்..?

சந்திரவதனா
யேர்மனி
2002

Tuesday, September 19, 2006

பால்வினை

பால்வினை என்னும்
பாழ் கிணற்றுக்குள்
வாழ்விழந்த பெண்கள்
மீள வழி உண்டா..!
ஏழ்மையினாலும்
சில மனிதர்களின் இச்சையினாலும்
சூழ உள்ளவர்களின் சூழ்ச்சியினாலும்
ஊனமானது உடல்கள் மட்டுமல்ல!
இவர்கள் உள்ளங்களும்தான்!

சந்திரவதனா
யேர்மனி
மே-2002

பிரசுரம் - பெண்கள் சந்திப்பு மலர் - 2002

http://www.selvakumaran.de/index2/kadduraikal/palvinai.html

Monday, September 18, 2006

மௌனமே....

இதுவரை
என் மௌனத்தையே
பலருக்குப் பதிலாக்கியுள்ளேன்.
இப்போதெல்லாம்
உன் மௌனமே
எனக்குள் கேள்வியாகின்றது.

சந்திரவதனா
18.1.2003

Sunday, September 17, 2006

நீயே ஒரு அழகிய கவிதைதானே.!

நீயே..!
அதிசயமாய்
அழகிய ஓவியமாய்
நகர்ந்து கொண்டே இருக்கும் நதியாய்
தழுவுகின்ற காற்றலையாய்...
எத்தனை பேருக்கு வசந்தமானாயோ..?

உன்னை எண்ணி...!
பூக்களின் நறுமணங்களை
எத்தனை பேர் நுகர்ந்தார்களோ..!

உனது விழிமொழிதலால்
எத்தனை விழி வாசல்கள் பூச்சொரிந்தனவோ..!

உனது குடிபுகுதலினால்
எத்தனை மனமுகடுகளில்
இனிய கானங்கள் ஒலித்தனவோ..?

இன்று உன் பிரிதலினால்
எத்தனை மனங்கள் ஏக்கப் புள்ளிகளுடன்
காதல் கோலங்களுக்காய் காத்திருக்கின்றனவோ..?

புரியாமல்.... புலம்பாதே...!
நீயே ஒரு அழகிய கவிதைதானே.!
பிறகேன் தேடுகிறாய் கவி - தை யை..?

சந்திரவதனா
யேர்மனி
4.8.02

Saturday, September 16, 2006

உன் பலம் உணர்ந்திடு!

பெண் வலம் சமையல் புலத்திலென்ற
காலம் போயாச்சு
வெண்கலத்துடன் போராடிய அவள் கரங்கள்
சுடுகலன்கள் ஏந்தியாச்சு
இன்னுமா..?
புலம் பெயர்ந்த என்னகத்துத் தமிழ்ப் பெண்ணே..!
உன் பலம் தெரியாது
சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும்
ஒளிந்திருந்து
கண்கலங்குகின்றாய்!
உன் பலம் உணர்ந்திடு!

சந்திரவதனா
10.10.02

Friday, September 15, 2006

மனசு சூனிய வெளிக்குள்...

மனசு சூனிய வெளிக்குள்
சிக்கித் தவிக்கிறது.

உன்னவள்
உன் அஸ்தியை
ஊருக்கு அனுப்புவது பற்றிப் பேசினாள்.
அவள் புண்ணியவாட்டி.
உன் அருகிருந்து
தன் கடன் முடித்து விட்டாள்.

நான்
எதுவுமே செய்யாதிருந்து விட்டு
இப்போ...
சூனிய வெளிக்குள் நின்று
சுற்றிச் சுழல்கிறேன்.

உயிர் போன பின்னும்
நீ அருகிருக்கிறாய் என்பதில்
வலி தெரியாதிருந்தது.
சிதையேறிய போதுதான்
நீ இனியில்லை என்ற நினைப்பில்
மனசு பதை பதைக்கிறது.

நாடொன்றுதானே
நன்றாக உறவாடியிருப்பேன் என்று
ஊரவர்கள் நினைப்பார்கள்.
யாருக்கும் நான் ஏதும் சொல்லவில்லை.
போரென்று வந்து புலம் பெயர்ந்த பின்
வேர்களும் விழுதுகளும் வெகு தூரமாகி...
போனதை நினைத்துப்
புலம்புவதுதானே வாழ்வாகிப் போச்சு

நாமெல்லோரும்
"நேரமில்லை" யென்றும்
"தூரமாகிப் போச்சு" என்றும்
இயலாமைகளுக்குப் போர்வை போர்த்திப்
பழகி விட்டோம்.

இத்தனை வருடங்களில்
எத்தனை தரம் சந்தித்திருப்போம்.
மின்னஞ்சலும்
தொலைபேசியும் இல்லையென்றால்
தொடர்பாடல் என்றைக்கோ
அறுந்து போயிருக்கும்
எமது ஓரிரு சந்திப்பின் போதான
உறவு முறை சொல்லி அழைக்கும்
உன் இதமான சிரிப்பு மட்டுந்தான்
என்னோடு நின்றிருக்கும்.

நான் அழவில்லை.
மனசுதான் அலைகின்றது
இல்லாத உன்னோடு கை கோர்த்து
உல்லாச உலா வருகின்றது
நீ இல்லை என்பது
உறைக்கும் சமயங்களில்
மல்லாக்காய் வீழ்கின்றது.

சந்திரவதனா
4.8.2003

Thursday, September 14, 2006

விசும்பல்

வானம் சிரித்திருந்தது
வண்ணப் பூக்களும் பூத்திருந்தன
தண்ணென்ற காற்று ஒவ்வொருவரையும்
தழுவிச் சென்றது.

பன்னிரண்டு பெண்கள்
வேலை செய்யும்
அந்த அலுவலக அறை மட்டும்
ஏனோ மௌனித்திருந்தது.

"இளவரசி டயானேவே இம்சைப் பட்டாளே"
பெண் படும் பாடுக்காய்
கண் கலங்கும்
சொன்யாவும் மௌனம்.

விண்வெளி தாண்டி
சந்திரனைத் தொட்ட Charles Contrad கூட
வீதி(விபத்திலே)யிலே மாண்டானே!
விதி பற்றி விவாதிக்கும்
வரோனிக்காவும் மௌனம்.

மனதால் தினம் தினம்
மணாளனை விவாகரத்துச் செய்து
சதா அவனைக் திட்டிக் கொட்டும்
மெலிசாவும் மௌனம்

கண்ட கண்ட
பகிடியெல்லாம் சொல்லி கழுத்தறுக்கும்
எறீனாவின் விசும்பல் மட்டும்
இடைவிடாது கேட்டது

நாளை மறுநாள்
அவள் மார்பகத்தை
எடுத்து விடப் போகிறார்கள்.
அவளுக்கு மார்பகப் புற்றுநோய்.

சந்திரவதனா
யேர்மனி
16.4.2000

Wednesday, September 13, 2006

காலமிட்ட விலங்கையும் உடை



பொல்லெடுத்து
உனை அடித்தார்களா..!
சொல்லெடுத்து
மனம் சிதைத்தார்களா..!
மெல்லியவள் என்று சொல்லி
மெல்லவே பின்னே
தள்ளியவர் முன்னே
கல்லுடைத்து...
வாழ்வின்
வளம் பொருத்த முனையும்
பெண்ணே..!
உடை
கல்லோடு சேர்த்து
காலமிட்ட விலங்கையும் உடை
வெல்வாய்!

சந்திரவதனா
யேர்மனி
10.3.2003

Monday, September 11, 2006

களிக்கும் மனங்களே கசியுங்கள்

உப்பளக் காற்றிலே
உயிரைக் கலைய விட்ட
எங்கள் பிள்ளைகளின்
குருதி வெள்ளத்தில்
ஏற்றி வைத்த
வெற்றிக் கொடியை
பற்றி
பரவசப் பட்டு
மனம்
ஆனந்தக் கண்ணீர் வடித்தது!

நியம் தந்த களிப்பில்
அவசரமாய் வந்த
ஆனந்தக் கண்ணீர்
அது நியமானது!
பிறகேன் போலியாய்
பார்ட்டியும்..!
படாடோபமும்..!

போர்க்களத்திலே வீழ்ந்தும்
குருதி வெள்ளத்திலே சாய்ந்தும்
போனவர்களின் தியாகமும்
அவர்கள்
ஈன்றவர்கள் மனதை
பற்றி நிற்கும் சோகமும்
நாம் இங்கு
பாடி நிற்கவும்
பார்ட்டி வைக்கவுமா..?
இல்லை!
வாடி நிற்கும் எம்மவர்
வாழ வேண்டும்
கூடிழந்த எம்மவர்க்கு
கூரை வேண்டும்
ஓடி ஓடிக் களைத்தவர்க்கு
ஓய்வு வேண்டும்
போலியாய்
எதுவும் வேண்டாம்..!

களிக்கும் மனங்களே
கசியுங்கள்
வெற்றி கண்ட மண்
வற்றி நிற்கிறது
பற்றோடு கை கொடுங்கள்.

சந்திரவதனா
யேர்மனி
29.4.2001

Sunday, September 10, 2006

நான் ஒரு பெண்

வீணை என்று
சொல்லாதே என்னை
நீ மீட்டுகையில் நாத மிசைக்கவும்
மீட்டாதிருக்கையில் மௌனிக்கவும்
நான் ஒன்றும் ஜடமில்லை

கிளி மொழியாள் என்று
சொல்லாதே என்னை
நீ சொன்னதைச் சொல்லவும்
சொல்லாதிருக்கையில்
தனிமைச் சிறையில் வாடவும்
நான் ஒன்றும் பட்சி இல்லை

பூ என்று
சொல்லாதே என்னை
தேவைப்பட்டால் சூடவும்
வாடி விட்டால் எறியவும்
நான் ஒன்றும்
எந்த வண்டுக்குமாய்
இதழ் விரிக்கும் மலரில்லை

பாவை என்று
சொல்லாதே என்னை
நுள்ளியும் கிள்ளியும் நீ விளையாடவும்
அலுப்புத் தட்டினால் தள்ளி எறியவும்
நான் ஒன்றும்
வாய் பேசாப் பொம்மையில்லை

மீட்டத் தெரியாதவனிடம்
அகப்பட்ட வீணையாகவோ
பேசத் தெரியாதவன் வீட்டு
கூட்டுக் கிளியாகவோ
சூடி எறியும் பூவாகவோ
கிள்ளி விளையாடி
அள்ளி உறவாடி
பின் தள்ளி எறியும்
பாவைப் பிள்ளையாகவோ
எண்ணாதே என்னை

சொல்லாலும் செயலாலும்
அன்போடு தொடுகின்ற
மென் உறவுக்காய் ஏங்குகின்ற
உன் போல மனம் கொண்ட
பெண் என்று மட்டும்
எண்ணு என்னை
அது போதும் எனக்கு.

சந்திரவதனா
யேர்மனி
May - 2000


பிரசுரம் - ஈழமுரசு(4-10 மே - 2000)
ஒலிபரப்பு - ஐபிசி - நிலாமுற்றம்( 8.5.2000)
ஒலிபரப்பு - ஐபிசி - நங்கையர் நாழிகை (2001)

Saturday, September 09, 2006

முத்தம்

அன்பு தேசத்தில் ஒட்டப்பட்ட
அழகான முத்திரை

ஆழ்ந்த அன்பைக் கூறும்
அழகான சொல்

காதல் தேசத்தின்
இறுக்கமான கை குலுக்கல்

அன்பையும் காதலையும் பிழிந்தெடுத்த
இனிய மது

ஆயிரமாயிரம் தரம் எழுதியோ
சொல்லியோ
புரிய வைக்க முடியாத அன்பை
ஒரே தரத்தில் உணர வைக்கும்
உன்னத பரிபாஷை.

சந்திரவதனா
யேர்மனி
21.7.99

Friday, September 08, 2006

ஏன் மறந்து போனாய்?




பெண் விடுதலை பற்றி
நண்பர்களுடன்
நயமாகப் பேசுகிறாய்!

சீதனக் கொடுமை பற்றி
மேதாவித் தனமாய்
மேடையில் விவாதிக்கிறாய்!

பெண்ணையும்
கண்ணாகப் பார்க்கும் படி
கதைகள் புனைகிறாய்!
கவிதைகள் வடிக்கிறாய்!

வீட்டிலே மட்டுமேன்
தாலி கட்டியவளை
வேலைக்காரி ஆக்குகிறாய்!
சீதனம் தரவில்லையென்று
வார்த்தையால் குத்துகிறாய்!

தாலி கட்டியவள்
உன் தாரம் மட்டுமல்ல
அவள் பூமியில் பிறந்ததே
உனக்கு சேவகம் செய்ய அல்ல

வாழ்க்கையின் ஆசைகள்
வசந்தத்தின் தேடல்கள்
நேசத்தைத் தேடும்
நெஞ்சுக்குள் ஏக்கங்கள்
கூடவே தன்னோடு
கூடாமல் கலைந்து...
உன்னோடு கூடவே
உனக்காகச் சிரிப்பவளும்
பெண் ஜென்மம் தானென்று
மறந்துதான் போனாயோ?

சந்திரவதனா
ஜேர்மனி
20.6.99

Monday, September 04, 2006

தாய்மனமும் சேய்மனமும்

சிறகிருக்கிறது
என்னைப் பறக்க விடு
என்பது பிள்ளை மனம்.

சிறு பிள்ளை நீ
என் இறகுக்குள் ஒளிந்து கொள்
என்பது பெற்ற மனம்.

புரியாமல் பறந்தோடும்
பிள்ளை மனம்
புரியும் போது
அதுவும் பெற்ற மனம்.

சந்திரவதனா
யேர்மனி
11.6.1999

விடுதலை வேண்டி.!

காற்றோடு கை கோர்த்து
ஊர்க்கோலம் போகின்ற
மகரந்தத் துகள்களுக்கு
என் நாசித்துவாரமும்
பாதையாகிப் போனதில்
தொண்டைக்குழி வரை
மசமசத்தது

விடுப்புப் பார்ப்பதே
வேலையாக இருந்ததில்
விழிகளும் சிவந்தன

“அக்கா!
சித்திரைக்குப் பொங்கியாச்சே?”

பாதையில் ஒரு தமிழன்
பாசமாய் கேட்டான்

„...ம்ம்ம்...“
காலைப் பரபரப்பில்
பாணைக் கடிக்கவே
மறந்தேன் என்றால்
நம்புவானா...!

பாதி இரவில் விழித்திருந்து
ஊரில் வாழும் உறவுக்காய்
அழுதேன் என்றால்
நம்புவானா...!

கற்தரையில் எம்மவர்
நித்திரை கொள்வதை
ஊர்க்கடிதம்
சொன்னதில் தொடங்கி

இந்திய வல்லூறுகள்
எம்மவரை
உயிர் வதம் செய்வதில்
தொடர்ந்து

செம்மணிப் புதைகுழியில்
எம் பெண்மணிகள்
புதைந்தது வரை

துரையப்பா விளையாட்டரங்கிலும்
புதை குழிகள்
தொடர்வது வரை

சத்தியமாக நான்
சித்திரைக்கு
பொங்கவில்லை என்றால்
நம்புவானா...!

„ஓம் தம்பி பொங்கியாச்சு „

என் பொய்யில்
முகம் மலர்ந்து
முன்னேறிப் போறவனும்
மூக்கைத்தான் தேய்க்கிறான்
கண்களையும் கசக்குகிறான்

அழகிய மலர்களின்
நுண்ணிய மகரந்தக்களுக்கு
இவன் மூக்கும் பலிதானோ.....!

காற்றோடு கை கோர்த்து
ஊர்க்கோலம் போகின்ற
மகரந்தத் துகள்களிடமிருந்தாவது
அந்நிய மண்ணில்
அடைக்கலம் தேடும்
எங்கள்
மூக்குகளுக்கும் கண்களுக்கும்
விடுதலை வேண்டுமென
இயற்கையை வேண்டிநின்றேன்.

சந்திரவதனா
யேர்மனி

April-2000
பிரசுரம்- எரிமலை May-2000

அப்பா

"நான் தமிழன்"
மார் தட்டிச் சொன்னாய்

"மமே கொட்டியா"
புத்தன் வழி வந்தவர்கள்
மத்தியில் சொல்லி
எத்தனை இன்னல்கள் பட்டாய்

58இல் தமிழன் அடிபட்டதிலிருந்தே
இரத்தம் கொதிக்க
கொழும்பு மோகம் கொண்டவர் மீது
கோபப் பட்டாய்

கொழுந்து விட்ட உன் கோபத் தீயில்
வளர்ந்து விட்ட உன் பிள்ளைகள்
உணர்வு கொண்டெழுந்து
விடுதலை வேட்கையுடன்
களம் புகுந்த போது
பாசத்தில் நெஞ்சு வெந்தாலும்
தேசத்தை எண்ணிப் பேசாதிருந்தாய்
புத்திரரின் வீரத்தை எண்ணி
பூரித்தும் இருந்தாய்

தாண்டிக்குளம் தாண்டும்
விதியொன்று வந்த போது
மீண்டும் ஊர் திரும்பும் நம்பிக்கையோடு
தாண்டினாய்
கொழும்பு வசதி பிடிக்காது
வவுனியாவிலே தஞ்சம் கொண்டாய்

வருத்தமுற்ற போது
வைத்தியம் செய்ய
போதிய மருத்துவர் இன்றி
எல்லாத் தமிழரையும் போல்
அடிபட்டும் போனாய்

வலிந்த
என்னைச் சுமந்த உன் தோள்கள்
வலுவிழந்து..
கால்கள் நடை தளர்ந்து...

களத்தில் இரு புத்திரரையும்
புலத்தில் மறு பிள்ளைகளையும்
தொலைத்து விட்டு
எங்கோ அந்தகாரத்துக்குள்
பிள்ளைப் பாசத்தைத் தேடித் தேடி
களைத்த உன் விழிகள்
பன்னிரண்டு வருடங்கள் கழித்து
என் முகம் பார்த்ததும்
கொட்டும் அருவியாகி
எனை நனைத்த போது
உனை அணைத்துத் தாயானேன்
எனை நனைத்த அக்கணத்தை
உயிருள்ளவரை மறவேன்.

சந்திரவதனா
1.12.1999

தத்துவம்

"உன்னைக் கொடு
என்னைத் தருவேன்"
காதலிக்கையில்

"உன்னைக் கட்ட
என்ன தருவாய்"
கல்யாணத்தில்

"உன்னைக் கட்டி
என்ன கண்டேன்"
தொடரும் வாழ்வில்

சந்திரவதனா
யேர்மனி

இலவு காத்த கிளியாக...!

பனியது பெய்யும்
அழகினைக் கண்டு
மனமது துள்ளும்

வெளியினில் சென்றால்
பனியது பெய்யும்
குளிரது அறைய
உடலது நடுங்கும்
உதிரமும் உறையும்

பனியது பெய்யும்
குளிரது அறைய
பனியது பூவாய்
மரங்களில் தெரியும்

அழகினை ரசிக்க
அவகாசமின்றி
பணமது தேடி
வேலைக்காய் கால்கள்
பனியினில் விரையும்

"குளிரிலும் பனியிலும்
பணமது தேடி..........!
இது என்ன வாழ்க்கை"
மனம் தினம் அலுக்கும்

மடியினில் சுமந்த
மகவுடன் குலாவ
மணியின்றி
மனமது துவழும்

வெயிலதன் வரவில்
பனியது ஓடும்
மரமது துளிர்க்க
மனமது மலரும்
மலர்களும் சிரிக்கும்

மாறும் மாறும் ......!
எல்லாம் மாறும்!
பணமது தேடும்
நிலையது மாறும்!
ஓய்வாய் உட்கார்ந்து
கதைக்க முடியும்
ஒன்றாய் சேர்ந்து
உண்ண முடியும்
விரும்பிய மட்டும்
உறங்க முடியும்
குழந்தைகளுடனே
குலாவ முடியும்
குடும்பமாய் கூடி
களிக்க முடியும் ...!

முடியும் ...! முடியும்...!
பட்டியல் நீளும்!
...முடியும் ...! முடியும்..!
எல்லாம் முடியும்...!

இலவாய் நினைவுகள்
காய்த்துக் குலுங்க
கிளியாய் மனமும்
காத்து நிற்கும்.

சந்திரவதனா
யேர்மனி
1999

எம்மவர் மட்டும் எங்கே...?

பனியின்றி குளிரின்றி
இந்த வருடத்தின் முதல் சிரிப்பு

இயற்கையின் சிரிப்பில்
துளிர்ப்பது மரம் மட்டுந்தானா..!
மலர்வது மலர் மட்டுந்தானா..!
மனிதர்களுந்தான்..!

நகரமே சிரித்தது
யேர்மனியின் அந்த நகரமே சிரித்தது
சிரித்துக் களித்தது
இயற்கையும் சிரிக்க மனிதரும் சிரிக்க
மலராய்த் தெரிந்தது

குட்டைப் பாவாடைகளும்
கட்டை ரீசேர்ட்டுகளும்
தலை காட்டா விட்டாலும்
சிட்டுக் குருவிகளாய் இளசுகள்
உதட்டோடு உதடுரசி
மூக்கோடு மூக்குரசி
கெஞ்சலும் கொஞ்சலுமாய்.....

வட்ட மேசைகளைச் சுற்றி
வட்ட மிட்ட கதிரைகளில்
பெரிசுகளும் சிறிசுகளும்
கண் பார்த்துக் கதை பேசி
மெல்லுதட்டில் தமை மறந்து
ஐஸ் சுவைத்து......
கை கோர்த்து நடக்கையிலும்
காதலுடன் இடை தழுவி
உடல் உரசி
மனம் சிலிர்க்க மலர் பரிமாறி....

இயற்கையோடு இயற்கையாக
சிரித்து... சிலிர்த்து...
ஊரே களித்திருக்கையில்
இந்நகரில் வாழும் இருபது தமிழரில்
ஒருவரையும் காணோமே...!

வன்னியும் வாகரையும்
மனத் திரையில் ஓட
எங்கேயும்
பிற்சேரியாவிலும் ரெஸ்ரோறண்டிலும்
கனவுகளைக் கழுவிக் கொண்டிருக்கிறார்களோ?

சந்திரவதனா
3.4.1999

ஓ... இதுதான் காதலா !

அன்பே!
உனக்கும் எனக்கும் என்ன சொந்தம்
உன்னோடு எனக்கென்ன பந்தம்

அலைஅலையாய் உன் நினைவு வந்து
என் மனமலையில் மோதுகையில்
சிறு மண்மேடாய் சரிந்து போகிறேன்
ஒரு பனி போலக் கரைந்து போகிறேன்.

தொலை தூரம் நீ வாழ்ந்தாலும்
உன் நினைவுகளோடுதான் நான்
தினம் வாழ்கிறேன்.

குளிரிலே இதமான போர்வையாய்
வியர்க்கையில் குளிர் தென்றலாய்
மழையிலே ஒரு குடையாய்
வெயிலிலே நிழல் தரு மரமாய்
தனிமையில் கூடவே துணையாய்
கால்களில் தழுவுகின்ற கடல் அலையாய்.....
உன் நினைவுகள் எப்போதும்
என்னோடுதான்

ஓ... இது தான் காதலா!
இது காதலெனும் பந்தத்தில்
வந்த சொந்தமா?
உனக்கு ஒன்று தெரியுமா?
திருமணத்திலும்
உடல் இணைவதிலும்தான்
காதல் வாழுமென்றில்லை
அன்பு நூலின் அதிசயப் பிணைப்பில்
நெஞ்சில் வாழ்வதும் காதல்

நினைவுகளின் தொடுகையிலே
உயிர்ப் பூக்கள் சிலிர்க்கின்ற
என் மனமென்னும் தோட்டத்தில்
உனக்காகத் துளிர்த்த காதல்

இன்று எனக்குள்ளே
விருட்சமாய் வியாபித்து
பூக்களாய் பூத்துக் குலுங்கி
அழகாய்
கனி தரும் இனிமையாய்

இது நீளமான காலத்தின்
வேகமான ஓட்டத்திலும்
அன்பு வேரின் ஆழமான ஊன்றலில்
நின்று வாழும் உண்மைக்காதல்

சந்திரவதனா
யேர்மனி
February-1999

சுதந்திரம்

நாற்பத்தெட்டில்
மாசி நான்காம் நாளில்
நமக்குச் சுதந்திரமாம்

படித்து
பரீட்சை எழுதி
புள்ளிகளும் பெற்றோம்

ஐம்பத்தெட்டில் தமிழன்
அடிபட்டானாம்
கண்களில் அனல் கக்க
அப்பா கதையாகச் சொன்னார்

குருவி போல்ச் சேர்த்த பணத்தில்
குதூகலமாய் தொட்டில் வாங்கி
மகப் பேற்றுக்காய்
வடக்கே சென்ற அம்மாவின்
வரவுக்காய் காத்திருக்கையில்...

அக்கினியில் அத்தொட்டில்
கருகுவதைப் பார்த்தாராம்
மலவாளி தலையில் கவிட்டு
மாமா நடப்பதைப் பார்த்தாராம்
ரயரோடு ஒரு தமிழன்
எரிவதைப் பார்த்தாராம்
இன்னும் அவலங்கள்.....!
எத்தனையோ பார்த்தாராம்

இவையெல்லாம் கதையாக
கொடுங் கதையாக
எனக்குள்ளே பதிந்தாலும்
போன கதைதானே....!
புழுங்காமல் இருந்தேன்

சுதந்திரம் அது என்ன?
புரியாமல் வாழ்ந்தேன்

எண்பத்தி மூன்று ஆடியின்
வெலிக்கடை ஓலத்தில்
சுதந்திரம்!
அது வேண்டும்
எமக்கென
நிரந்தர இடம் வேண்டும்
புரிந்தாலும்.....!
சுயநலம் அது கொண்டு
வெளிநாடு ஓடி வந்தேன்
அந்நியன் மண்ணிலே
அகதி முகாமிலே
வயிற்றுக்காய்......
கன்ரீனில் வரிசையிலும்
காசுக்காய்.....
சோசலிலே கதிரைகளிலும்
மானத்தை விற்று
வேலைக்காய்.....
கால் கடுக்க வீதிகளிலும்
வெள்ளையனின் வாசல்களிலும்
வெட்கத்தை விசிறி
என்னத்தைக் கண்டோம்!
சுதந்திரம் அது என்ன?
மறந்து போச்சு எமக்கு

வேலை கிடைத்தும்
வீடு கிடைத்தும்
விசா கிடைத்தும்
ஈடு கொடுக்க முடியவில்லை
அந்நிய தேச வாழ்க்கைக்கு

ஊரின் அவலங்கள்
உலுக்கும் சேதியாய்
நெஞ்சைக் குடைகையிலும்
வேறு வழியின்றி
ஓடிச் செல்கின்றோம்
அந்நியனின் கீழ்
அடிமையாய் வேலை செய்ய

சுமைகளாய் சோகங்கள்
தொடர்களாய் வேலைகள்
சுதந்திரம் அது வாங்க
ஏணி எங்கே?
தேடுகின்றோம்.

சந்திரவதனா
ஜேர்மனி
4.2.1998

Sunday, September 03, 2006

வயல் வெளி

அருவிவெட்டு காலமதில்
அமைதியுடன் அமர்ந்திருந்தேன்
குருவியினம் கூச்சலிட்டு
குஞ்சுகளைக் கவர்ந்தழைக்க
புரவியினம் ஆங்காங்கே
புற்தரையில் அலைந்திருக்க
கருவிகளின் ஒலி கேட்டு
கலவரத்தால் அதிர்ந்து விட்டேன்.

தலைதூக்க முடியாது
தள்ளாடி நிற்குமந்த
நிலை கெட்ட நெற் கதிர்கள்
அலைந்து நிற்கும் வேளையிலே
தலை அறுத்துச் செல்வதற்கு
வந்திருந்தார் கயவர் சிலர்
மலையொத்த கதிர்க்குவியல்
நிலை குலைந்து சரிந்தனவே.

வயல் பாட்டுப் பாடிக்கொண்டே
கதிர்க் கட்டைத் தலையில் வைத்து
கயல் விழியார் சென்றனரே
வயலதனின் வரம்பினிலே
மயிலதனின் எழிலுடனும்
முயலதனின் கதியுடனும்
செயலாற்றி நின்றனரச்
சேரி இளம் பெண்கள் சிலர்.

ஆடவர்கள் வெட்டி வைக்க
மங்கையர்கள் சுமந்து செல்ல
கூட நின்ற தோழர்களும்
கூடி ஒன்றாய்ப் பாடினரே
ஓடி ஆடி உழைப்பவர்கள்
உற்சாகமாய் இருக்க எண்ணி
நாடிவந்த நானும் நின்று
நயமாகப் பாடினேனே.

சந்திரவதனா - 1975
ஒலிபரப்பு - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனம்) - 1981