Monday, September 04, 2006

அப்பா

"நான் தமிழன்"
மார் தட்டிச் சொன்னாய்

"மமே கொட்டியா"
புத்தன் வழி வந்தவர்கள்
மத்தியில் சொல்லி
எத்தனை இன்னல்கள் பட்டாய்

58இல் தமிழன் அடிபட்டதிலிருந்தே
இரத்தம் கொதிக்க
கொழும்பு மோகம் கொண்டவர் மீது
கோபப் பட்டாய்

கொழுந்து விட்ட உன் கோபத் தீயில்
வளர்ந்து விட்ட உன் பிள்ளைகள்
உணர்வு கொண்டெழுந்து
விடுதலை வேட்கையுடன்
களம் புகுந்த போது
பாசத்தில் நெஞ்சு வெந்தாலும்
தேசத்தை எண்ணிப் பேசாதிருந்தாய்
புத்திரரின் வீரத்தை எண்ணி
பூரித்தும் இருந்தாய்

தாண்டிக்குளம் தாண்டும்
விதியொன்று வந்த போது
மீண்டும் ஊர் திரும்பும் நம்பிக்கையோடு
தாண்டினாய்
கொழும்பு வசதி பிடிக்காது
வவுனியாவிலே தஞ்சம் கொண்டாய்

வருத்தமுற்ற போது
வைத்தியம் செய்ய
போதிய மருத்துவர் இன்றி
எல்லாத் தமிழரையும் போல்
அடிபட்டும் போனாய்

வலிந்த
என்னைச் சுமந்த உன் தோள்கள்
வலுவிழந்து..
கால்கள் நடை தளர்ந்து...

களத்தில் இரு புத்திரரையும்
புலத்தில் மறு பிள்ளைகளையும்
தொலைத்து விட்டு
எங்கோ அந்தகாரத்துக்குள்
பிள்ளைப் பாசத்தைத் தேடித் தேடி
களைத்த உன் விழிகள்
பன்னிரண்டு வருடங்கள் கழித்து
என் முகம் பார்த்ததும்
கொட்டும் அருவியாகி
எனை நனைத்த போது
உனை அணைத்துத் தாயானேன்
எனை நனைத்த அக்கணத்தை
உயிருள்ளவரை மறவேன்.

சந்திரவதனா
1.12.1999

No comments: